திரு. சி. சுப்பிரமணியம், திரு. ராஜா சர் முத்தையா செட்டியார், டாக்டர் ஏ.எல். முதலியார், திரு. ப. சிதம்பரம், திரு. ம. ப பெரியசாமித்தூரன் போன்ற சான்றோர்களும் அறிஞர்களும் பங்கேற்று கழகத்தை வளர்த்து வந்துள்ளனர். கழகத்தின் வளர்ச்சியில் மேனாள் துணைவேந்தர்களான முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் மு. பொன்னவைக்கோ ஆகியோர் பெரும் பங்காற்றியுள்ளனர். தற்போது தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் அறங்காவலர் குழுவின் தலைவராக மேனாள் ஒன்றிய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களும், தலைவராகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் பத்துத் தொகுதிகளாகப் பொதுக் கலைக்களஞ்சியமும், குழந்தைப் பருவத்தினருக்கென பத்துத் தொகுதிகளாகக் குழந்தைகள் கலைக்களஞ்சியமும் வெளியிட்டுப் பெருமை பெற்றுள்ளது.
